Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM

சமூக வலைதளங்களில் ஆண்களை குறிவைத்து மோசடி : சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை

சமூக வலை தளங்களில் ஆண்களை குறிவைத்து நடைபெறும் மோசடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஃபேஸ்புக் (முகநூல்) மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருக்கும் வசதியான ஆண்களின் கணக்கை மோசடி நபர்கள் கண்காணிக்கின்றனர். பிறகு அழகான பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகளைத் தொடங்கி, ஆண்களின் கணக்குகளுக்கு நட்பு அழைப்பு விடுக்கின்றனர்.

இதில் சபலப்படும் ஆண்களை தேர்வு செய்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலமாக தவறான உறவுக்கு அழைக்கின்றனர். அவர்களின் மோசடி வலையில் விழுந்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் வரும் ஆண்களின் புகைப்படங்களை படம் பிடித்தும், வீடியோவை பதிவு செய்தும் வைத்துக் கொள்கின்றனர்.

தொடர்ந்து அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தொடர்புடைய ஆணின் நண்பர்களது முகநூல், இன்ஸ்டாகிராம்-க்கு அனுப்புவதாக கூறி பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.

பலரும் இதுபோன்ற மிரட்டல்களை வெளியில் சொன்னால் தங்களது கவுரவமும், மரியாதையும் பாதிக்கப்படும் என பயந்து வெளியில் சொல்லாமல் இருந்து விடுகின்றனர். இந்த மோசடியில் பெண்களைப் போல குறுஞ்செய்தி அனுப்புவதும் ஆண்கள் தான். எனவே, இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். மிரட்டல்கள் வந்தால் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x