Published : 04 Jul 2021 03:14 AM
Last Updated : 04 Jul 2021 03:14 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 2,72,545 பேர் தடுப்பூசி போட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வரத்து இல்லாததால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவந்தது. இதனால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மையங்களுக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டது.
இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்துக்கு 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று வந்ததை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி மீண்டும் நடைபெற்றது. அடுத்த 3 நாட்களுக்கு அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொய்வின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது. இதனால் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT