Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM

25 லட்சம் இளைஞர்களின் வாழ்வை மேம்படுத்த நடவடிக்கை : விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் தகவல்

கோவை

தமிழகத்தில் விளையாட்டுத் துறையின் கீழ் 25 லட்சம் இளைஞர்களின் வாழ்க்கை சூழல் மேம்படுத்தப்படும் என, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

கோவை நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் தயாராகிவரும் ஹாக்கி விளையாட்டு மைதானம் ஆகியவற்றை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது:

சர்வதேச விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் நம்முடைய வீரர்கள் வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தேவையான பயிற்சி மேற்கொள்வதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகளை உலகத் தரத்தில் அரசு ஏற்படுத்தி தரும்.

ஆர்.எஸ்.புரத்தில் உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 25 லட்சம் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் கீழ் கொண்டு வந்து, அவர்களின் வாழ்க்கை சூழல் மேம்படுத்தப்படும். வருவாய் ஈட்டும் துறையாக விளையாட்டுத் துறை மாற்றி அமைக்கப்படும். சென்னையில் ‘ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ்’ நகரம் உருவாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடும் நடவடிக்கை

இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை, அரசு விதிகளுக்கு உட்பட்டு அப்புறப்படுத்துவதை கண்காணிக்க வேண்டும். ஆறு, ஏரி, குளங்கள் ஆகிய நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டும் நிறுவனங்களின் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாச்சலம், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x