Published : 02 Jul 2021 03:12 AM
Last Updated : 02 Jul 2021 03:12 AM

மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என அழைக்க தடை விதிக்க முடியாது : மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்க தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பழனியைச் சேர்ந்த ராமசாமி என்பவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என அழைத்து வருகிறது. திமுக அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் மத்திய அரசை, ‘ஒன்றிய அரசு’ என்றே அழைத்து வருகின்றனர். இந்த செயல் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந் துள்ளது. இதை தடுக்காவிட்டால் ஜம்மு-காஷ்மீர் போல் பிரிவினைக் கும் வாய்ப்பாக அமையும்.

சட்டப்பேரவையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப் பது தொடர்பாக பாஜக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கையில், மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது சமூக குற்றமில்லை. தொடர்ந்து அவ்வாறுதான் அழைப்போம் என தெரிவித்தார்.

எனவே, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், உரைகளில் மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அரசின் அறிவிப்புகள், உத்தரவுகள், உரை களில் நாட் டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாது காக்கும் வகையில் மத்திய அரசை அழைக்க வேண்டும் என தமிழக அரசை, மத்திய அரசு அறிவுறுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகி யோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா அல்லது பாரதம் என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே உள்ளன. அவ்வாறு இருக்கையில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது’’ என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘மாநில முதல்வரும், அமைச்சர்களும் இப்படித்தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அது அவர்களின் தனியுரிமை. இந்த மனுவை தாக்கல் செய்ததன் மூலம் மனுதாரர் தமிழக மக்களுக்கு எதை கற்றுக்கொடுக்க விரும்புகிறார் எனத் தெரியவில்லை. மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x