Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM

48,786 பேருக்கு கரோனா தொற்று :

புதுடெல்லி

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) புதிய நோயாளிகள் எண்ணிக்கை 37,566 ஆக இருந்தது. இது, மார்ச் 18-க்கு பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். புதிய நோயாளிகள் எண்ணிக்கை புதன், வியாழன் ஆகிய இரு தினங்களில் சற்று கூடியுள்ளது. எனினும் 23-வது நாளாக இது 1 லட்சத்துக்கு குறைவாக உள்ளது.

நாட்டில் தற்போது 5 லட்சத்து 23,257 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,005 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 99,459 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு உயிரிழப்பு ஜூன் 30-ல் 817 ஆக இருந்தது. ஏப்ரல் 10-க்கு பிறகு இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 நாட்களுக்கு பிறகு ஆயிரத்தை கடந்துள்ளது.

கரோனா மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 4 லட்சத்து 11,634 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 61,588 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சத்து 88,918 ஆனது.

கடந்த 24 மணி நேரத்தில் 27 லட்சத்து 60,345 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 33.57 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x