Published : 02 Jul 2021 03:15 AM
Last Updated : 02 Jul 2021 03:15 AM

புதுக்கோட்டை அருகே கல் குவாரி வெடி விபத்தில் இளைஞர் உயிரிழப்பு :

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கல் குவாரியில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

வயலோகம் அருகே அகரப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான கல் குவாரி, முக்கணாமலைப்பட்டி ஊராட்சி மேட்டுப்பட்டியில் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை மழை பெய்ததையடுத்து அங்குள்ள வெடிபொருள் குடோன் அருகே தொழிலாளர்கள் ஒதுங்கி நின்றனர்.

அப்போது, மின்னல் தாக்கியதில், வெடிமருந்து குடோனில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறின. மேலும், அங்கிருந்த கொட்டகை, மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. அங்கு மழைக்கு ஒதுங்கி நின்ற தொழிலாளர்களும் தூக்கி எறியப்பட்டனர்.

இதில், பலத்த காயமடைந்த இலுப்பூர் வட்டம் வீரப்பட்டி தெற்குக் களத்தை சேர்ந்த குமார் மகன் விஜி(18), குடுமியான்மலை அருகே உள்ள சேரனூரைச் சேர்ந்த கருப்பையா(45), ஆண்டிச்சாமி(51), எம்.செல்வராஜ்(50), பி.சுரேஷ்(32), சி.காந்தி(36) உள்ளிட்ட 11 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அன்னவாசல் அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில், சிகிச்சை பலனின்றி விஜி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x