Published : 29 Jun 2021 06:11 AM
Last Updated : 29 Jun 2021 06:11 AM
பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன்பாக மாணவர் சேர்க்கையை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் கல்லூரிகளுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்வது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, உயர்கல்வித் துறைமுதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள்உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர் களிடம் கூறியதாவது:
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஜூலை 31-க்குப் பின்னர்தான் மேற்கொள்ள வேண்டும். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் ஜூலை 31-ம் தேதிதான் வெளியாகிறது.
மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் பணிதற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அப்பணி விரைவில் முடிவடையும்.
எனவே, மாநில வழிக் கல்விமற்றும் சிபிஎஸ்இ வழியில் படித்த மாணவர்களின் மதிப்பெண்கள்ஜூலை 31-ம் தேதிக்குள் இறுதிபடுத்தப்படும். அதற்குப் பின்னர்தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
சில தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்று வருவதாகஅரசுக்குத் தகவல் வருகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதிக்குப் பிறகுதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதை மீறும் தனியார் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் க.பொன்முடி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT