Published : 27 Jun 2021 03:14 AM
Last Updated : 27 Jun 2021 03:14 AM
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 2,669 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், சிறப்புப்பள்ளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 68 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 2,669 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் பயனடையும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் முகாம்களில் அவர்களுக்கென தனிவரிசை அமைக்கப்பட்டு முன்னுரிமையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, தொடர்ந்து அவர்களது பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்களது தேசிய அடையாள அட்டை மற்றும் ஆதார அட்டையுடன் முகக்கவசம் அணிந்து சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 0431 2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT