Published : 25 Jun 2021 03:11 AM
Last Updated : 25 Jun 2021 03:11 AM

பாஜக எம்எல்ஏ தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை - பிரதமர் மோடியை கிண்டல் செய்து பேசினேன் : குஜராத் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி விளக்கம்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கர்நாடகா மாநிலத்தில் பேசிய ராகுல் காந்தி, "நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி, எப்படி அனைவருக்கும் ஒரே பெயர் உள்ளது. இங்கு நாட்டிலுள்ள அனைத்து திருடர்களும் மோடி என்றே அதே குடும்ப பெயரைக் கொண்டிருப்பது எப்படி" எனப் பேசினார். ராகுலின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தியின் பேச்சு பிரதமர் மோடி மீது மட்டுமின்றி, ஒட்டுமொத்த மோடி சமூகம் குறித்தும் அவதூறு கூறும் வகையில் உள்ளதாக பூர்னேஷ் மோடி என்ற பாஜக எம்எல்ஏ கடந்த 2019 ஏப்ரல் மாதம் புகார் அளித்தார். இது குறித்த வழக்கு குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 2019=ம் ஆண்டு அக்டோபர் மாதமும் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரானார். இவ்வழக்கில் தனது இறுதி அறிக்கையை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நேற்றும் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரானார்.

அப்போது, எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறிப்பிடும் வகையில்தான் பேசவில்லை எனத் தெரிவித்த ராகுல் காந்தி, தான் கிண்டல் செய்யும் வகையிலேயே பேசிய தாகவும் மேற்கொண்டு எதுவும் நினைவு இல்லை என்றும் விளக்கமளித்தார். இதையடுத்து இந்த வழக்கு ஜூலை 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

சிவசேனா கருத்து

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில், ‘‘பிரதமர் மோடியின் தவறுகளை ராகுல் காந்தி சுட்டிக் காட்டி வருகிறார் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர் ட்விட்டரில் மட்டுமே பிரதமரை பேசி வருகிறார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க அவரால் முடியவில்லை’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x