Published : 25 Jun 2021 03:15 AM
Last Updated : 25 Jun 2021 03:15 AM

திமுக மாவட்ட செயலாளர்களுடன் - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை : உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படும்

உள்ளாட்சித் தேர்தல் தொடர் பாக திமுக மாவட்டச் செயலாளர் களுடன் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். உள்ளாட்சித் தேர்தல் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. எனவே, மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் பிரிப்பு, புதிய மாவட்டங்கள் உருவாக்கம் காரணமாக தேர்தல் நடைபெறாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்.15-ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக திமுகவினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x