Published : 24 Jun 2021 05:50 AM
Last Updated : 24 Jun 2021 05:50 AM

காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாக். கடத்தல்காரர் சுட்டு கொலை ரூ.135 கோடி ஹெராயின் பறிமுதல் :

காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் கடத்தல்காரர் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எப்) நேற்று சுட்டுக் கொன்றனர். அவரிடமிருந்து ரூ.135 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்எப் ஜம்மு பிரிவு டிஐஜி எஸ்பிஎஸ் சாந்து கூறியதாவது:

கதுவா மாவட்டம் ஹிராநகர் பகுதியில் பன்சார் சாவடி அருகே, அதிகாலை 2.45 மணியளவில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் நடமாடுவதை பிஎஸ்எப் வீரர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, அந்த நபரை அடுத்தடுத்து வீரர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனாலும் எச்சரிக்கையை மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற அவரை நோக்கி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அந்த நபர் உயிரிழந்தார்.

அவரிடமிருந்து 27 பொட்டலங்கள் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.135 கோடி ஆகும். பாகிஸ்தான் ராணுவத்தின் ஒத் துழைப்பு இல்லாமல் இந்த முயற்சி நடந்திருக்க வாய்ப்பு இல்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்.

இதே எல்லைப் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ரகசிய சுரங்கம் இருந்தது கடந்த ஜனவரி 23-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் கடத்தல்காரரின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x