Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் கரோனா ஒழிப்பு தொடர்பான சுகாதாரப் பணிகளில் சிலர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் சிலர் பணி நியமனம் செய்யப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நீக்கம் செய்யக்கோரி ஆளுங்கட்சி நிர்வாகிகள் நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதைக் கண்டித்து அதிமுக பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன், பாஜக ஒன்றியத் தலைவர் கார்த்திகேயன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காளிதாஸ், அர்ஜூனன், பாமக மாநில நிர்வாகி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், கூட்டுறவு சங்கம் முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறும்போது, ‘‘கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பணியாற்றி வரும் தற்காலிகப் பணியாளர்களை நீக்க வேண்டும் என திமுகவினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். கரோனா பரவல் அதிகரித்து பொருளாதார ரீதியாக பணியாளர்கள் அவதிக்குள்ளாகி வரும் சூழலில், அவர்களை பணியில் இருந்து நீக்குவது, கண்டிக்கத்தக்கது. இதை அரசின் கவனத்துக்குகொண்டு செல்லும் விதமாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் கூட்டுறவு சங்கப் பதிவாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது’’ என்றனர். சிறிது நேரத்துக்குப்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT