Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM

கரோனாவால் தாமதமாகும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் - தனியார் பள்ளிகளில் இதுவரை ஆன்லைன் விண்ணப்பம் வழங்கப்படவில்லை : தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

தனியார் பள்ளிகளில் பொது பிரிவு மாணவர்களுக்கான எல்.கே.ஜி சேர்க்கை முடிந்து ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பமான நிலையில், நலிவடைந்த பிரிவு குழந்தைகளுக்கு இன்னும் ஆன்லைன் சேர்க்கைகூட தொடங்கப்படவில்லை.

இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் அடிப்படையில் மே மாதம் இறுதிக்குள் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் 25 சதவீதம் இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஜூன் மாதம் ஆரம்பத்தில் பள்ளிகள் ஆரம்பமாகும் போது இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் சேர்த்து பள்ளியில் பாடங்கள் நடத்த ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளாகும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இதுகுறித்த தகவல்களைப் பெற்றுள்ள சமூக ஆர்வலர் வெரோணிக்கா மேரி கூறியதாவது: இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் கடந்த 2019-20-ம் ஆண்டு நிர்ணயித்த 1,24,859 இடங்களில் 73,790 இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்தது. மீதம் 51,069 இடங்கள் காலியாக இருந்துள்ளன.

கடந்த 2020-21 கல்வியாண்டு சேர்க்கையின்போது கரோனா எதிரொலியால் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஆன்லைன் சேர்க்கை தாமதமானது. நிர்ணயித்த இலக்கு சேர்க்கை நடைபெறாததால் கடந்தாண்டு நவம்பர் மாதம் வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. ஆனால் மறுபுறம் பொது பிரிவில் கட்டணம் செலுத்தி படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வழக்கம்போல் ஜூன் மாதமே ஆரம்பிக்கப்பட்டது. இதனால் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் திட்டத்தில் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை மாணவர்களின் கல்வித்தரம் கடந்த ஆண்டே பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேலும், தமிழக பள்ளிக்கல்வித்துறை சென்றாண்டு கல்வியாண்டுக்கு நிர்ணயித்த சேர்க்கை இடங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 40 சதவீதத்துக்கும் மேலான இடங்கள் காலியாக இருந்தன. இந்நிலையில் தற்போது நடப்பாண்டும் கரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் தனியார் பள்ளிகளில் பொது பிரிவில் சேர்க்கைகள் நடைபெறுவதற்கு சில தளர்வுகளை அறிவித்த நிலையில், தனியார் பள்ளிகளில் சேர்க்கைகள் முடிவு பெற்றுள்ளது.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பமான நிலையில், இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் இதுவரை நலிவடைந்த பிரிவினருக்கான சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள்கூட பெறப்படவில்லை. அரசு எந்த அறிவிப்புகளும் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருவதால் இலவச கட்டாயக்கல்வி சட்டம் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஏழை பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்கக முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த திட்டத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆன்லைன் விண்ணப்பங்கள் உடனடியாக பெறுவதோடு, நிர்ணயித்த சேர்க்கை இடங்களுக்கான இலக்கை 100 சதவீதம் நிரப்ப புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி சாமிநாதனிடம் கேட்டபோது, ‘‘இன்னும் இந்த திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அரசு அறிவிப்பு வெளியிடவில்லை. வந்ததும் உறுதியாக தொடங்கிவிடும்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x