Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM

பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா : இன்று கிராமத்தில் சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்டம் கும்மனூர் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் நேற்று வழங்கினார்.

பாலக்கோடு வட்டம் கும்மனூர் ஊராட்சியில் இருளர் இன குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் வீட்டுமனை பட்டா இல்லாத 52 குடும்பங்களுக்கு பட்டா வழங்குதல் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியது:

கும்மனூர் ஊராட்சியில் வசிக்கும் இருளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 52 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா, 12 நபர்களுக்கு புதிய மின்னணு ரேஷன் அட்டையுடன் ரூ.4000 வீதம் கரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள், 5 நபர்களுக்கு இருளர் இன சாதிச் சான்றிதழ் ஆகியவை தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளது. வீட்டுமனை பட்டா பெற்ற 52 குடும்பங்களுக்கு விரைவில் தமிழக அரசு சார்பில் வீடு கட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும். இப்பகுதியில் ரேஷன் அட்டை இல்லாத, தகுதிவாய்ந்த நபர்களுக்கு விரைவில் ரேஷன் அட்டை வழங்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். இருளர் இன சாதிச்சான்று, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவிக்க வசதியாக 24-ம் தேதி (இன்று) வருவாய் துறை அலுவலர்கள் மூலம் கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி கோட்டாட்சியர் (பொ) தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், வட்டாட்சியர் அசோக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ரவிச்சந்திரன், ஊராட்சித் தலைவர் முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x