Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM
புதுடெல்லி: காஷ்மீரில் அரசு பணிகளில் உள்ள சிலர் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக விசாரிக்க கடந்த மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் விசாரணையைத் தொடர்ந்து முதல் நடவடிக்கையாக சமீபத்தில் உதவிப் பேராசிரியர் உட்பட 3 பேர் அரசுப் பணிகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், காஷ்மீரில் இனி அரசுப் பணிகளில் சேர விரும்புவோர், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் பற்றிய தகவல்கள், அவர்கள் ஏதாவது அரசியல் கட்சி அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புகளில் இருக்கிறார்களா என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசு வேலைக்கு தேர்வு செய்யப்படுவோர் தரும் விண்ணப்ப விவரங்களை பணி நியமன அதிகாரிகள் சிஐடி தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். சிஐடி போலீஸார் அந்த விண்ணப்பதாரர், அவரது உறவினர்கள் பற்றிய விவரங்கள், கடந்த கால செயல்பாடுகள், அவர்களது பின்னணி ஆகியவை குறித்து சரிபார்த்து ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவார்கள். சிஐடி அறிக்கை திருப்திகரமாக இருந்தால் மட்டுமே அரசுப் பணி வழங்கப்படும். இதேபோல அரசு பணியில் உள்ளவர்கள் பற்றியும் மறு சரிபார்ப்பு தேவை என்றால் அவர்கள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும். சிஐடி போலீஸாரின் அறிக்கை எதிராக இருந்தால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நியமனம் தானாவே ரத்தாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT