Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM
பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க காஷ்மீர் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டுஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டன. அப்போது நகரின் குப்கரில் உள்ள தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் வீட்டில் 6 கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி குப்கர் என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கினர்.
இதில் தேசிய மாநாடு கட்சி,மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட், காஷ்மீர் அவாமி தேசிய மாநாடு, காஷ்மீர் மக்கள் இயக்கம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
காஷ்மீரில் இயல்புநிலை திரும்பும்போது மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே உறுதி அளித்திருக்கிறது. இதன்படி காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளித்து அங்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த மத்திய அரசுதிட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் ஜூன்24-ம் தேதி காஷ்மீரில் உள்ளஅனைத்து கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்பதா, வேண்டாமா என்பது குறித்து குப்கர் கூட்டணி தலைவர்கள், பரூக் அப்துல்லாவின் நகர் வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதன்பின் குப்கர் கூட்டணியின் தலைவர் பரூக் அப்துல்லா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். பிரதமருடன் பேசுவது தொடர்பாக இப்போதைக்கு பொதுவான கொள்கையை வரையறுக்கவில்லை. எனினும் அனைத்து விவகாரங்கள் குறித்தும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்’’ என்றார்.
குப்கர் கூட்டணியின் துணைத் தலைவரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி கூறும்போது, ‘‘காஷ்மீர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்துவோம். காஷ்மீருக்கான உரிமைகளை மீட்டெடுக்க குரல் எழுப்புவோம்’’ என்றார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT