Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் தாய், மகன் உட்பட 4 பேர் நேற்று உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனி பகுதியில் ஏராளமானவீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் சோதனை நடத்தி பலரைக் கைது செய்துள்ளனர். ஆனாலும், இப்பகுதியில் தொடர்ந்து பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தாயில்பட்டி கலைஞர் காலனியில் சூர்யா (29) என்பவரது வீட்டில் நேற்று காலை சோல்சா ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. அப்போது சமையலறையில் ஏற்பட்ட தீப்பொறி, பட்டாசுகள் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் அடுத்தடுத்த வீடுகளில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் 4 வீடுகள் இடிந்து தரை மட்டமாயின.
மேலும், இவ்விபத்தில் அப்போலோ என்பவரது மனைவி செல்வமணி (35), அவர்களது மகன் ரகபியா சல்மோன் (5), காளிராஜ் என்பவரது மனைவி கற்பகம்(35) ஆகியோர் உயிரிழந்தனர். சூர்யாவுக்கு 75 சதவீத தீக்காயமும், சோலையம்மாள் என்பவருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்பி மனோகரன் சம்பவ இடத்தைபார்வையிட்டு விசாரணை நடத்தினார். காயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சூர்யா சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார். இதை அடுத்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
சிவகாசி அருகே உள்ள புலிப்பாறைபட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் பட்டாசு தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை இடிந்து சேதமடைந்தது. விபத்தில் காயமடைந்த சிவலிங்காபுரத்தைச் சேர்ந்த குருசாமி(45) சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து மாரனேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT