Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM
தமிழகத்தில் மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு, கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்றுமுதல் பொது பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் முழுஊரடங்கு ஜூன் 21 (இன்று) காலை 6 மணிக்கு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், மருத்துவ வல்லுநர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அடிப்படையில் ஜூன் 28-ம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
நோய்த்தொற்று பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் முதல் வகையாகவும், அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்,புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் 2-வது வகையாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய4 மாவட்டங்கள் 3-வது வகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும். வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகள், கூடுதல் செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள், காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம்.
உணவகங்கள் மற்றும் அடுமனைகளில் (பேக்கரி) பார்சல்சேவை, இனிப்பு, கார வகைகள் விற்பனை காலை 6 முதல்இரவு 9 மணிவரை அனுமதிக்கப்படும். உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் இந்த நேரத்தில் செயல்படலாம். இதர மின் சேவை நிறுவனங்களும் காலை 6 முதல் இரவு 9 மணிவரை இயங்கலாம்.
அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், சார்பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாகவும் செயல்படலாம். அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடனும் இயங்கலாம்.
மின்பொருள் விற்பனை கடைகள், ஹார்டுவேர் கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்பனை கடைகள், மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்கும் கடைகள், வாகன விற்பனை நிறுவனங்கள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்.
கல்வி புத்தகங்கள், எழுதுபொருள் விற்பனைக் கடைகள், காலணிகள் விற்பனையகங்கள், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடைகள், கைபேசி மற்றும் அதைச்சார்ந்த பொருட்கள் விற்பனை, மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9 முதல் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படும்.
மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திர பழுதுநீக்குபவர்கள், தச்சர் உள்ளிட்டசுயதொழில் செய்பவர்கள் காலை 6 முதல் மாலை 5மணிவரை இ-பதிவுடன் பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.
அனைத்து வகையான கட்டுமானப் பணிகளும் அனுமதிக்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
காலை 6 முதல் மாலை 5 மணிவரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.
திரையரங்குகளில் வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒருநாள் மட்டும் பராமரிப்புப் பணி மேற்கொள்ளலாம்.
வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் இ-பதிவுடன் செல்லலாம். டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
வீட்டுவசதி நிறுவனம், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
பொது அனுமதி
வகை 2 மற்றும் 3-ல் உள்ளமாவட்டங்களுக்கு இடையில் திருமண நிகழ்வுகளுக்கு, திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் ஆட்சியரிடம் ‘’ இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று பயணம் செய்யலாம். திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க, தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்கலாம்.
அரசின் முயற்சிகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி கரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவ வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.
பேருந்துகள் இயக்கம்
இதுதவிர, வகை 3-ல் இடம்பெற்றுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகியமாவட்டங்களில் கடைகள் திறப்புக்கு கூடுதல் நேரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் மட்டும் 50 சதவீத பயணிகளுடன் பொது பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகளை 100 பேர் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்தலாம், டாக்சி, ஆட்டோக்களில் இ-பதிவின்றி பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT