Last Updated : 21 Jun, 2021 03:14 AM

 

Published : 21 Jun 2021 03:14 AM
Last Updated : 21 Jun 2021 03:14 AM

நடிகையை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய வழக்கில் தலைமறைவாக இருந்த - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது :

நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேற்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறைஅமைச்சராக இருந்த மணிகண்டன், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, 3 முறைகருக்கலைப்பு செய்து ஏமாற்றியதாக ம‌லேசியாவை சேர்ந்த நடிகை சாந்தினி சென்னை காவல் துறையில் புகார் அளித்தார்.

இதை விசாரித்த போலீஸார், இந்திய தண்டனை சட்டம் 376 (பாலியல் வன்கொடுமை), 313 (கட்டாய கருக்கலைப்பு), 506 (1) (கொலை மிரட்டல்) உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து மணிகண்டன் தலைமறைவானார். அவரைப் பிடிக்க 2 தனிப் படைகளை அமைத்து, சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்றது. மணிகண்டன் பயன்படுத்தும் 2 செல்போன் எண்களைக் கொண்டு அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிய முயன்றனர். ஆனால் அவர் இரு செல்போன்களையும் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்திருந்ததால், அவரைக் கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து, மணிகண்டனுக்கு நெருக்கமானோரின் செல்போன் எண்கள் மூலம் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறியும் முயற்சி தொடர்ந்தது.

நெல்லையில் சிக்கிய நண்பர் ஒருவர் கொடுத்த செல்போன் எண் மூலம் மணிகண்டனை போலீஸார் நெருங்கினர். அந்த செல்போன் சிக்னல் பெங்களூருவைக் காட்டியதால், தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்தனர்.

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி அடுத்துள்ள ஹெப்பகுடியில், தனது நண்பருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த மணிகண்டனை, தனிப்படை போலீஸார் நேற்று காலையில் கைது செய்தனர்.

இதையடுத்து, ஆனேக்கல் காவல் நிலையத்துக்கு மணிகண்டனை அழைத்துச் சென்று, அவர் கைது செய்யப்பட்ட தகவலைப் பதிவு செய்தனர். பின்னர், ரகசிய இடத்தில் மணிகண்டனிடம் விசாரணை நடத்திய போலீஸார், சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அவருக்கு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை யும், பொதுவான மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

பின்னர் அவரை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார், அவரிடம் விரிவான விசாரணை நடத்தினர். சாந்தினி அளித்த புகார் தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர் அளித்துள்ள பதில்கள் அனைத்தையும் போலீஸார் வீடியோவாக பதிவுசெய்தனர்.

ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு அடுத்த மாதம் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x