Published : 21 Jun 2021 03:14 AM
Last Updated : 21 Jun 2021 03:14 AM

போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி : பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை

போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி செய்வோரிடம் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம்போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:

முகநூல் (ஃபேஸ்புக்) கணக்கில்உள்ள ஒருவரது புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, அதை பயன்படுத்தி அவரது பெயரிலேயே ஒரு முகநூல் கணக்கை உருவாக்கி, அவரது நண்பர்களிடம் பணம் பறிக்கும் மோசடி சமீப காலமாக நடைபெற்று வருகிறது. ஒரு குறிப்பிட்ட நபரின் முகநூல் கணக்கில் உள்ள நண்பர்கள் பட்டியலில் சென்று, அவரது நண்பர்களின் முகநூல் கணக்கு விவரங்களை மோசடி நபர்கள் தெரிந்து கொள்கின்றனர். பிறகு போலியாக உருவாக்கப்பட்ட முகநூல் கணக்கிலிருந்து அந்த நபரின் நண்பர்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், உடனடியாக பணம் அனுப்புமாறும் அவர்களது கூகுள் பே கணக்குஎண் அல்லது வங்கிக் கணக்குஎண்ணை குறிப்பிட்டு குறுஞ்செய்திஅனுப்புகின்றனர். அவர்கள் அனுப்பும் பொய்யான தகவல்களை உண்மையென நம்பி பணம் பரிமாற்றம் செய்வோர் தங்களது பணத்தை இழக்கின்றனர்.

இத்தகைய சைபர் கிரைம் மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, முகநூல் கணக்கில் செட்டிங்ஸ்-ல் சென்று ‘லாக்டு ப்ரஃபைல்’ என்பதை தேர்வு செய்து செயல்படுத்துவதன் மூலமாக முகநூல் கணக்கின் புகைப்படம் மற்றும் பிற விவரங்களை உங்கள் நண்பர்களைத் தவிர புதியவர்கள் பார்வையிடாமல் தடுக்க முடியும்.

மேலும் இத்தகைய போலியான முகநூல் கணக்குகளின் யுஆர்எல், அசல் முகநூல் கணக்கின் யுஆர்எல்-லில் இருந்து மாறுபட்டு இருக்கும். எனவே, இதனை சரிபார்ப்பதன் மூலம் போலியான முகநூல் கணக்கை ஒருவர் தெரிந்து கொள்ளமுடியும். முழுமையாக உங்களது முகநூல் கணக்கை ‘லாக்’ செய்ய விரும்பாவிட்டால் நண்பர்கள் பட்டியலையாவது வேறு யாரும் பார்வையிடாத வகையில் ‘லாக்’ செய்து வைப்பதன் மூலமாக இத்தகைய மோசடிகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x