Published : 21 Jun 2021 03:15 AM
Last Updated : 21 Jun 2021 03:15 AM

ஓசூர் பேரண்டப்பள்ளியில் ரூ.20.20 கோடியில் கட்டப்படும் - சர்வதேச மலர் ஏல மைய கட்டிடப் பணிகளை எம்எல்ஏ ஆய்வு :

ஓசூர் பேரண்டப்பள்ளியில் ரூ.20.20 கோடி மதிப்பில் 7.67 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் சர்வதேச மலர் ஏல மைய கட்டிடப் பணிகளை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.

ஓசூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கொய்மலர் உள்ளிட்ட பல்வேறு மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதன் மூலமாக தினமும் 4 லட்சம் கொய்மலர்களும், 30 டன் உதிரி மலர்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இம்மலர்களை குளிர்சாதன கிடங்குகளில் பதப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் ஓசூர் பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை அருகே ரூ.20.20 கோடி மதிப்பில் 7.67 ஏக்கரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்க கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இம்மையத்தில் மலர்களை பதப்படுத்தி பாதுகாக்கும் வகையில் குளிர் சாதன கிடங்கு வசதியுடன், மின்னணு முறையில் ஏல விற்பனை செய்யப்படும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. இதில், உள்நாட்டு மலர் வியா பாரிகள் இடைத்தரகர் பிரச்சினை இன்றி நேரடியாக மலர் ஏலத்தில் பங்கேற்று பயனடையலாம்.

மேலும் பன்னாட்டு மலர் வியாபாரிகள் இணையம் வழியாக ஏலத்தில் பங்கேற்கும் வசதியும், நவீன தொழில் நுட்பத்தில் மலர் சாகுபடி செய்யும் முறைகள் மற்றும் ஏற்றுமதி தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்படும்.

இம்மையத்துக்கு வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான குடிநீர், உணவு விடுதி மற்றும் பொது கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சர்வதேச மலர் ஏல மைய கட்டிடப்பணிகளை திமுக எம்எல்ஏ பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, முன்னாள் எம்எல்ஏ-க்கள் சத்யா, முருகன், வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குநர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x