Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

உலகின் 3-வது மிகப் பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு :

போட்ஸ்வானா நாட்டில் தோண்டி எடுக்கப்பட்ட உலகின் 3-வது மிகப்பெரிய வைரம்.படம்: ஏஎப்பி

காபரோன்

உலகின் 3-வது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கு பகுதியில் போட்ஸ்வானா நாடு உள்ளது. அந்த நாட்டில் 23 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அங்கு 4 மிகப்பெரிய வைர சுரங்கங்கள் செயல்படுகின்றன. அரசின் வருவாயில் 50 சதவீதம் வைரங்கள் விற்பனை மூலம் கிடைக்கிறது. கரோனா வைரஸால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் வைரங்கள் விற்பனை குறைந்து போட்ஸ்வானா நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் போட்ஸ்வானா நாட்டின் சுரங்கம் ஒன்றில் அண்மையில் 1,098 காரட் வைரம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 73 மி.மி. நீளம், 52 மி.மி. அகலம், 27 மி.மி. தடிமன் கொண்ட இது உலகின் 3-வது மிகப்பெரிய வைரம் ஆகும்.

கடந்த 1905-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவில் 3,106 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் உலகத்தின் மிகப்பெரிய வைரமாகும். கடந்த 2015-ம் ஆண்டில் போட்ஸ்வானா நாட்டில் 1,109 காரட் வைரம் தோண்டி எடுக்கப்பட்டது. இது உலகத்தின் 2-வது பெரிய வைரமாகும். தற்போது போட்ஸ்வானா நாட்டிலேயே உலகின் 3-வது மிகப்பெரிய 1,098 காரட் வைரம் கிடைத்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் மேம்பட்ட பிறகு, 3-வது மிகப்பெரிய வைரம் ஏலம் விடப்படும் என்று போட்ஸ்வானா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x