Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

உணவகங்களில் பார்சல் சேவையின்போது - உறைகளை எச்சில் தொட்டு எடுக்கக் கூடாது : சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தல்

உணவகங்களில் பார்சல் சேவையின்போது உறைகளை எச்சில் தொட்டு எடுப்பது, வாயில் ஊதிப்பிரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

உணவுக் கூடங்களில் அமர்ந்துஉண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தளர்வுகளில் ஒன்றாக அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டது. உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. மளிகை, இறைச்சி மற்றும் மீன்கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்த நிலையில், அந்த கடைகளிலும் உறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

உறைகளை எடுக்கும்போது, கடை ஊழியர்கள் எச்சில் தொட்டுஅந்த உறைகளை எடுப்பது, பொருட்களை உள்ளே போடுவதற்காக வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கரோனா தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும். அதனால், இதைத் தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.

நீதிமன்றம் அறிவுறுத்தல்

சமீபத்தில் இது தொடர்பான ஒரு பொது நல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடைகளின் ஊழியர்கள் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும்போது உறைகளை கையால் எச்சில் தொட்டு பிரித்தல், வாயால் ஊதுதல் போன்ற செயல்களால் கரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது என்பது குறித்துகடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தவும், அவர்கள் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தஉரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வெற்றிபெற பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம். உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில்தொட்டு எடுத்தல், வாயால் ஊதிப்பிரித்தல் போன்ற செயல்களால் கரோனா தொற்று பரவும் அபாயம்உள்ளதை கடை உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு, அவர்களுடைய ஊழியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x