Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

உ.பி. பாஜக துணைத் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் ஏ.கே.சர்மா நியமனம் :

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே, ஆதித்யநாத் மீது அதிருப்தியில் உள்ள சொந்த கட்சி எம்எல்ஏக்கள், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என வலியுறுத்தி வந்தனர். எனினும், ஆதித்யநாத்தையே மீண்டும் முதல்வர் வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்துள்ளது.

இதையடுத்து, கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் நடவடிக்கையில் ஆதித்யநாத் தீவிரம் காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பாஜகவில் இணைந்த குஜராத் மாநில முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே.சர்மாவை அமைச்சரவையில் சேர்க்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வந்தன.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஏ.கே. சர்மாவை உத்தரபிரதேச பாஜக துணைத் தலைவராக கட்சித் தலைமை நேற்று நியமித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் ஏ.கே.சர்மா, தற்போது உத்தர பிரதேச எம்எல்சியாக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x