Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ பாப்பாசுப்ரமணியன், மாவட்ட அணி நிர்வாகிகள் பொன்வாசுகிராமன், கலியபெருமாள், சம்பத், ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், குணசேகரன், சேகர், மணிகண்டன், செந்தில், நகரச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தினமும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊரறிய வெளியிடுவதும் என வினோதமான நாடகத்தை அரங்கேற்றி வரும் சசிகலாவை கண்டிப்பது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், குறுவை சாகுபடி தங்குதடையின்றி நடைபெறும் வகையில், தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரை காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் கர்நாடக அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி கேட்டுப்பெற வேண்டும். பருவமழை தொடங்கும்வரை முறைவைக்காமல் தண்ணீர் திறந்துவிடவேண்டும். சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் நிபந்தனையற்ற பயிர்க் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT