Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு - கரோனா நிவாரண தொகை வழங்க தடை கோரி வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகை வழங்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா 2-வது அலையின் தீவிரபாதிப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான இழப்புகளைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் கரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ. 4 ஆயிரம் உதவித்தொகை வழங்க தடை விதிக்கக் கோரி திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் பி. ராம்குமார்ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

உணவுப் பொருள் வழங்கல் துறையின் புள்ளிவிவரங்கள்படி மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து87 ஆயிரத்து 496 குடும்ப அட்டைகள் தமிழகத்தில் உள்ளன. இதில் அரிசிகுடும்ப அட்டைதாரர்கள் 2 கோடியே7 லட்சத்து 87 ஆயிரத்து 950 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்குவதற்காக ரூ.4 ஆயிரத்து 153 கோடியே 69 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரிசி அட்டைதாரர்களில் மத்திய, மாநில, பொதுத்துறை அரசு அதிகாரிகள், வங்கிகள், மின் வாரியம், பிஎஸ்என்எல், ஆயுள் காப்பீட்டுநிறுவன ஊழியர்கள், ரயில்வே, போக்குவரத்து நிறுவனங்கள், நீதித் துறை ஊழியர்கள், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரி, இதர கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்த துறைகளில் பணிஓய்வு பெற்றவர்களும் உள்ளனர்.

இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளமும், ஓய்வூதியமும் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு கட்டுப்பாட்டால் இவர்களுக்கு வருமான இழப்பு இல்லை. எனவே மேற்கண்ட அரசுப்பணிகளில் பணியாற்றும் மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்ற குடும்பஅட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம்கரோனா நிவாரண உதவித்தொகையாக வழங்க தடை விதிக்க வேண்டும்.

மேலும் வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ள மற்றும் கரோனா ஊரடங்கால் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிமற்றும் நீதிபதி ஆர்.சுப்பையா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது அரசுதலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம்கரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டம் பெரும்பாலும் முடிந்து விட்டதாக தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில்பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x