Published : 19 Jun 2021 03:13 AM
Last Updated : 19 Jun 2021 03:13 AM

ஜிஎஸ்டி பங்குத் தொகையை சரிவர வழங்குவதில்லை : மத்திய அரசு மீது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மதுரையில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசினார். உடன், அமைச்சர் பழனிவேல்ராஜன், துறைச் செயலர்கள் எம்.ஏ.சித்திக், பா.ஜோதிநிர்மலா சாமி உள்ளிட்டோர்.

மதுரை

ஜிஎஸ்டி பங்குத்தொகையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சரிவர வழங்குவதில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பி.மூர்த்தி, .பழனிவேல்தியாகராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தென்மாவட்ட முக்கிய வணிகர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தமிழகத்தில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இதுபோன்று அனைத்து வணிகர்களிடமும் வணிகவரித் துறை சார்பில் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.

தமிழக நிதி வருவாயில், கடந்தாண்டு வணிகவரித் துறையின் பங்கு ரூ. 96,000 கோடி. பத்திரப்பதிவு மூலம் ரூ.10 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. என்றார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், கரோனா நிவாரண நிதிக்கு ரூ.9 ஆயிரம் கோடி, பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணச் சலுகை மூலம் ரூ.1,200 கோடியும் செலவாகிறது. எரிபொருள் மூலம் கிடைக்கும் வரி ஏழை மக்களிடமிருந்தே அதிகமாக வருகிறது. ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்கு 48% வரியாக கிடைக்கிறது. இது மாநில அரசுகளுக்குச் சரிவர வழங்கப்படுவதில்லை என்றார்.

முதன்மைச் செயலர் மற்றும் வணிகவரித் துறை ஆணையர் எம்.ஏ.சித்திக், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் பா.ஜோதி நிர்மலா சாமி, மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் மற்றும் தென்மாவட்ட வணிகவரித் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x