Published : 19 Jun 2021 03:14 AM
Last Updated : 19 Jun 2021 03:14 AM
மதுரை மாவட்ட இளைஞர்கள் முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதல்வர் மாநில இளைஞர் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயதுக்குட்பட்ட 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதன்படி 2021-ம் ஆண்டுக்கான முதல்வர் மாநில இளைஞர் விருது ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
இவ்விருது பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் 1.4.2020 முதல் 31.3.2021 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT