Published : 18 Jun 2021 03:14 AM
Last Updated : 18 Jun 2021 03:14 AM

தமிழகத்தில் கரோனா 3-ம் அலை ஏற்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை : முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

கரோனா தொற்றின் மூன்றாம் அலை தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா 3-வது அலையின் தாக்கம் தவிர்க்க முடியாதது. 2-வது அலையைவிட 3-வது அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று் விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் நோய் எதிர்ப்புத் திறன் இருக்கும் என்பதால், அவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் எத்தனை பேர் என்பதை கண்டறிந்து, முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு விரைவில்தடுப்பூசி செலுத்த வேண்டும். தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்க எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜூன் 16 நிலவரப்படி மொத்தம் 1.12 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் மக்கள் தொகை 8 கோடி என்று எடுத்துக் கொண்டாலும் 16 கோடிதடுப்பூசிகள் நமக்கு தேவை.

இதில், இதுவரை 7.5 சதவீதம் தடுப்பூசிகள்தான் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் 92.5சதவீதம் செலுத்தப்பட வேண்டும். இதுதான் 3-ம் அலையை கட்டுப்படுத்த முக்கியமான வழி.

எனவே, முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, 3-வதுஅலை ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x