Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

கிருஷ்ணா நீர் பூண்டிக்கு விநாடிக்கு 280 கன அடி அளவில் வருகை :

தமிழக அரசின் கோரிக்கையின் விளைவாக ஆந்திர அரசு, சென்னை குடிநீருக்காக கடந்த 14-ம் தேதி காலை முதல் கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி கிருஷ்ணா நீரை, கிருஷ்ணா கால்வாயில் திறந்து வருகிறது.

அந்த தண்ணீர் தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு நேற்று முன்தினம் காலை வந்தடைந்தது. அதை, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். ஜீரோ பாயிண்டை வந்தடைந்த கிருஷ்ணா நீர், அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு நேற்று முன்தினம் மாலை வந்தடைந்தது. அப்போது, விநாடிக்கு 105 கன அடி என்ற அளவில் வந்த கிருஷ்ணா நீர் நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 280 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நேற்று காலை நிலவரப்படி, 169 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. இதிலிருந்து விநாடிக்கு 244 கன அடி நீர் பேபி கால்வாய், இணைப்பு கால்வாய்கள் மூலம் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x