Published : 18 Jun 2021 03:16 AM
Last Updated : 18 Jun 2021 03:16 AM
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 63 நாட்களுக்குப் பிறகு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர்.
தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மாதங்களை மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரிகளின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. எனவே மீன் வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், ஏப்.15 முதல் ஜுன் 14 வரை விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் முதல் எஸ்.பி பட்டினம் வரை பாக் ஜலசந்தி கடலிலும், தனுஷ்கோடியில் இருந்து கன்னிராஜபுரம் வரை மன்னார் வளைகுடா கடலிலும் விசைப் படகுகளில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் படகுகள் கடற்கரை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
ஜுன் 14-ம் தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் ஜூன் 15 முதல் கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். ராமேசுவரம் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க வரும் 30-ம் தேதி முதல் செல்கின்றனர்.
ஆனால் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 63 நாட்களுக்குப் பின்னர் மீன் பிடிக்க மன்னார் வளைகுடா கடலுக்கு நேற்று சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT