Published : 18 Jun 2021 03:16 AM
Last Updated : 18 Jun 2021 03:16 AM
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
2018-ல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. பிரதமர் மோடி மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டினார். ஆனால், கட்டுமானப் பணிகளை இன்னும் தொடங்கவில்லை.
தென் மாவட்டங்களில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைகள் தோப்பூரில் எய்ம்ஸ் வரவிடாமல் தடுத்து வருகின்றன. தனியார் மருத்துவமனை நிர்வாகங்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு எய்ம்ஸ் திட்டத்தை நிறைவேற்றாமல் அதிகாரிகளும் தாமதப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்தக் கடிதத்துக்கு மத்திய அரசின் செயலர் பி.வி.மோகன்தாஸ் அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
தோப்பூரில் ரூ.1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 17.12.2018-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. தோப்பூரில் எய்ம்ஸ் அமையும் இடத்தில மண் பரிசோதனை, சுற்றுச்சுவர் கட்டுதல், ஏரியல் ஆய்வு உள்ளிட்ட முன் ஆய்வுப் பணியை மேற்கொள்ள ஹிடேஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
முன் ஆய்வுப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இப்பணிகள் முடிவடையும்.
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது தொடர்பாக ஜப்பான் நிறுவனம் மற்றும் மத்திய அரசு இடையே கடந்த ஆண்டு மார்ச் 26-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT