Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

ஆந்திராவின் தலைநகரமாக தயாராகும் விசாகப்பட்டினம்: 10,000 சோலார் தெரு விளக்குகள், விஐபிகளுக்கு தனி சாலை அமைக்க திட்டம்

விசாகப்பட்டினம்

ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினம் உருவாகி வருகிறது. இதனால் இங்கு நகரை அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் இருப்பது அவசியம் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தி வருகிறார். அமராவதியில் சட்டப்பேரவையும் கர்னூலில் உயர் நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் செயல்படும் என அறிவித்தார். ஆனால்அமராவதி நகருக்கு நிலம் கொடுத்தவிவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். ஆனாலும் தனது முடிவில் ஜெகன்மோகன் உறுதியாக இருக்கிறார்.

சமீபத்தில் இவர் டெல்லி சென்றபோதும் இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினார். விரைவில் கர்னூலுக்கு உயர்நீதிமன்றம் மாற்றப்படும், பிறகு விசாகப்பட்டினத்திற்கு தலைமைச் செயலகம் மாற்றப்படும் என அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் விசாகப்பட்டினத்தை அழகுமிகு நகரமாக ஜொலிக்க வைக்க தற்போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே விசாகப்பட்டினம் மிகவும் அழகிய நகரமாகும். விமானநிலையம், துறைமுகம் போன்ற வசதிகள் இங்குள்ளன. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தற்போதுதெரு விளக்குகளை சோலார்விளக்குகளாக மாற்றியமைக்கும் திட்டமும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி துறைமுகத்திலிருந்து, விசாலாட்சி கடற்கரை வரை சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.20 கோடி செலவில் 10 ஆயிரம் சோலார் தெரு விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 1.5 லட்சம் எல்இடி பல்புகள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அப்படி அமைக்கப்பட்டால் அதுவே நம் நாட்டின் மிக நீளமான சோலார் விளக்குள் தெருவாக அமையும். தற்போது இத்திட்டம்சோதனை அடிப்படையில் மாநகராட்சிக்கு வெளியே பாண்டுரங்கபுரம் பகுதியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு முக்கியப் பிரமுகர்கள் செல்ல தனி விஐபி சாலை ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x