Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM
அமைச்சர் துரைமுருகன் மற்றும்தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆகியோரின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி அவர்களை எதிர்த்துபோட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பொதுச் செயலாளரான துரைமுருகன், காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நீர்ப்பாசனம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். துரைமுருகனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவேட்பாளர் ராமு, 746 வாக்குகள்வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவர், துரைமுருகனின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
‘வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே எனக்கும், துரைமுருகனுக்கும் இடையே கடும்போட்டி நிலவி வந்தது. துரைமுருகன் 85,140 வாக்குகளும், நான் 84,394 வாக்குகள் பெற்றதாகவும் கூறி, துரைமுருகன் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை. தகுதியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. எனவே, தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் மீண்டும் மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும். துரைமுருகன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என மனுவில் ராமு கோரியுள்ளார்.
இதேபோல தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து, அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வ மோகன்தாஸ் பாண்டியனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
‘பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. குறிப்பாக தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்’ என மனுவில் அவர் கோரியுள்ளார்.
இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT