Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM
மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல், திறந்தவெளியில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-ன் படி, மருத்துவமனைகளில் உருவாகும் மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து, பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். தொற்று ஏற்படுத்தக்கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மிகாமல் சேமித்தல் கூடாது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளுவதற்காக, அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தற்போது கரோனா தொற்று நிலவிவரும் சூழலில், மருத்துவக் கழிவுகளை முறையில்லாமல், திறந்த வெளியில் கொட்டுவது பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், கரோனா தொற்று பராமரிப்பு மையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம் களில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து, அந்தந்த பகுதிகளில் உள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு விதிகளை பின்பற்றாமல் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT