Published : 17 Jun 2021 03:12 AM
Last Updated : 17 Jun 2021 03:12 AM
சென்னையில் உள்ள 6 நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பொருட்களை பொதுமக்களுக்கு தாமதமின்றி வழங்க கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலால் வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், ரூ.4 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, முதல் கட்டமாக மே மாதம் ரூ.2 ஆயிரம் தமிழகத்தில் உள்ள 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த மாதம் 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரணம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் 3-ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நியாயவிலைக் கடைகளில் நிவாரணம் மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்பு கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் டோக்கன் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டை, நந்தனம், லாயிட்ஸ் காலனியில் உள்ள 4 நியாயவிலைக் கடைகள் உட்பட 6 கடைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். அங்கு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரணம், 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, பொதுமக்களுக்கு காலதாமதமின்றி பொருட்களை வழங்கும்படி கடை ஊழியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் மற்றும், 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினார். இந்த நிகழ்வில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT