Last Updated : 17 Jun, 2021 03:12 AM

 

Published : 17 Jun 2021 03:12 AM
Last Updated : 17 Jun 2021 03:12 AM

தனியார் பள்ளிகளுக்கு நிகரான செயல்பாட்டால் காரைக்குடி நகராட்சி பள்ளியில் விண்ணப்பங்கள் குவிந்தன: கூடுதல் வகுப்பறைகளை பெற நிர்வாகம் முடிவு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 3 நாளில் இருக்கைகளைத் தாண்டி 2 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதால், அரசிடம் கூடுதல் வகுப்பறைகள், ஆசிரியர்களை கேட்டுப் பெற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று குறையும் நிலையில், அரசு உத்தரவுப்படி ஜூன் 14 முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தனியார் பள்ளி மோகத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் இக்காலக்கட்டத்தில், ஆச்சரி யப்படுத்தும் விதமாக காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

நடுநிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி, 2013-14-ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 6 ஆசிரியர்களும் 218 மாணவர்களும் இருந்தனர். அதே ஆண்டு தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற ஆ.பீட்டர்ராஜா முயற்சியால், 2014-2015-ம் கல்வி யாண்டில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது.

தரம் உயர்த்தப்பட்டதில் இருந்தே 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருகிறது. இதனால் மாணவர் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்தது. கடந்த ஆண்டே 1,490 மாணவ, மாணவியர் படித்தனர். 45 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், ஜூன் 14-ம்தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. 200 இடங்களே உள்ள 6-ம் வகுப்புக்கு மூன்று நாட்களில் 400-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு பலர் தங்களது குழந்தை களுக்கு இடம் கிடைக்காமல் ஏமா ற்றம் அடைந்தனர். அதனால், இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் அனைவரையும் சேர்த்துக் கொள்ள பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஆ.பீட்டர்ராஜா கூறியதாவது: ஆசி ரியர்கள் மற்றும் கட்டிட வசதி அடிப்படையில் 6-ம் வகுப்பில் 200 மாணவர்களைத்தான் சேர்க்க முடியும். இருப்பினும், இந்தாண்டு அனைவரையும் சேர்த்துக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் விண்ணப்பிக்கும் அனைவரையும் சேர்க்க உள்ளோம். தற்போது ஆன்லைன் வகுப்பு என்பதால் பெரிதாகச் சிரமம் இருக்காது. பள்ளி திறப்பதற்குள் கூடுதல் வகுப்பறைகள், ஆசிரியர்களை அரசிடம் கேட்டுப் பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x