Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM
ஈரோடு: ஈரோடு லக்காபுரத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொமதேக மாநில பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரன், கரோனா நிவாரணப் பொருட்களை நேற்று வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கரோனா மூன்றாவது அலை வந்தாலும், மக்களை அரசு பாதுகாக்கும் என்ற நம்பிக்கையோடு மக்கள் இருக்கலாம். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலைக்கு கடந்த காலத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போதும் அதே போல் எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழக மக்களின் ஏகோபித்த கருத்தினை ஏற்று 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். நீர்நிலைகளில் சாயக்கழிவு நீர் கலக்கும் பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்கவும், செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் தடுப்பூசி உற்பத்தி மையத்தை திறக்க அனுமதி கோருதல், காவிரி நீர் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பிரதமருடனான சந்திப்பில் தமிழக முதல்வர் பேசுவார் என நம்புகிறேன். சசிகலா ஆடியோ வெளியிடுவது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதுகுறித்து பதில் அளிக்க விரும்பவில்லை, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT