Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த சில மாதங்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்ததால், அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுக்கான படுக்கைகளில் பெரும்பாலானவை கரோனா நோயாளிகளுக்கு மாற்றப்பட்டன. இதன் காரணமாக, பிற நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. பெரிய மருத்துவமனைகளில்கூட இதுபோன்ற நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
கரோனாவால் பாதிக்கப்படாதவர்களுக்காக தனி வளாகம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், விபத்தால் காயமடைந்தவர்கள், கர்ப்பிணிகளுக்கு மட்டுமே அங்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதய நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவது இல்லை என்றும், அதற்கு இன்னும் சில காலமாகும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
தமிழகம் முழுவதும் இதுபோன்ற மருத்துவ உதவி தேவைப்படுவோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இதில் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த நீலை நீடித்தால், கரோனா தொற்று இல்லாதவர்களின் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, கரோனா தொற்று இல்லாத பிற நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்ய வேண்டும். முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT