Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM

வேன் மோதி தீப்பிடித்ததில் - மொபட்டில் சென்ற தந்தை, மகள் உயிரிழப்பு : தெய்வச்செயல்புரம் அருகே பரிதாபம்

தூத்துக்குடி மாவட்டம் தெய்வச் செயல்புரம் அருகே மொபட் மீது வேன் மோதி தீபிடித்ததில் தந்தை, மகள் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (45). கூலித் தொழிலாளி. இவர், தனது இரண்டாவது மனைவியின் மகள் சவுமியாவுடன் (8) நேற்று முன்தினம் இரவு மொபட்டில் மூலக்கரைப்பட்டியில் இருந்து தூத்துக்குடி வந்துள்ளார். இரவு 11 மணியளவில் தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர் கோயில் அருகே வந்த போது, தவறான பாதையில் எதிரே வந்த வேன் மொபட் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கணேசன், சவுமியா இருவரும் வேனுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். அப்போது திடீரென வேன் தீப்பிடித்து எரிந்தது. இதனால் இருவரும் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் கீழே குதித்து உயிர் தப்பினார். நேற்று மாலை தான் உயிரிழந்த தந்தை, மகள் அடையாளம் தெரிய வந்தது. விபத்து தொடர்பாக முறப்ப நாடு போலீஸார் வேன் ஓட்டுநர் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகேயுள்ள பன்னாம்பச்சேரியை சேர்ந்த பால்துரை (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள புளியங்குளம் கிராமம் ராமசாமி கோயில் தெருவைச் சேர்ந்த நடராஜன் மனைவி பிரியா (25). இவர், திருநெல்வேலி வி.எம். சத்திரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த வீரசுந்தரி என்பவர் பின்னால் அமர்ந்திருந்தார்.

செய்துங்கநல்லூர் அருகே வந்தபோது எதிரே வந்த கார், ஸ்கூட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வீரசுந்தரி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி, காரை ஓட்டி வந்த ஆத்தூர் மேற்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சின்னதுரை (26) என்பரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x