Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM
நாகர்கோவில் நகரின் ஒரே குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை உள்ளது. 25 அடி உயரம் கொண்ட இந்த அணை விரைவாக வற்றிவிடுகிறது. கோடைகாலத்தில் நகரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பது வழக்கமாகிவிட்டது. அந்நேரத்தில், பேச்சிப்பாறை அணையில் இருந்து முக்கடலுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து நாகர்கோவில் நகருக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இப்பிரச்சினையைப் போக்கும் வகையில், புத்தன்அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் முழுவீச்சில் தொடங்கியது. கடந்த ஆண்டே இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பணிகள் இன்னும் முடிவடையவில்லை. நாகர்கோவி லில் பாதாள சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்டு, ஏற்கெனவே மூடப்பட்ட சாலையோரங்களில் மீண்டும் குழி தோண்டப்பட்டு, புத்தன் அணைத் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. `இத்திட்டப்பணிகள் முடிய இன்னும் 4 மாதங்களுக்கு மேல் ஆகும். அதன் பின்னரே குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடு நடைபெறும்’ என அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த ஏப்ரல், மே மாதம் கோடை காலத்தில் நாகர்கோவில் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என, மக்கள் அச்சப்பட்ட நேரத்தில், கனமழை கைகொடுத்து முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டியது. தற்போது மழைக்காலம் என்பதால் புத்தன்அணை திட்டம் நடைமுறைக்கு வரும் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என, மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT