Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM

கங்கைகொண்டசோழபுரத்தை அடுத்த மாளிகைமேடு பகுதியில் - அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடக்கம் :

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தை அடுத்த மாளிகைமேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் ஒரு மாதத்துக்கு பிறகு நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கின.

தமிழக தொல்லியல் துறை மூலம் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்டசோழபுரம் உட்பட 7 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதில், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள மாளிகைமேடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று, அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.

அப்போது, பானை ஓடுகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள், செப்புக்காசு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. மேலும், புராதன பொருட்கள் கிடைக்கின்றனவா என தீவிர ஆராய்ச்சியில் அலுவலர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே கரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மாதம் 10-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்ததையடுத்து நேற்று முன்தினம் முதல் அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இதில் குறைந்தபட்ச தொழிலாளர்களைக் கொண்டு கரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு பணிகள் நடைபெறுவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x