Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM

மருத்துவ கழிவுகளை திறந்தவெளியில் கொட்டக் கூடாது : தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மருத்துவக் கழிவுகளை திறந்தவெளி யில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

மருத்துவமனைகளில் இருந்து உருவாகும் மருத்துவ கழிவு களை முறையாக பிரித்து, சேமித்து, பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மிகாமல் சேமித்தல் கூடாது. மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளுவதற்காக அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ளது.

இருப்பினும், மருத்துவ கழிவுகளை சாலைகள், ஆற்றங்கரைகள், நீர் நிலைகள் பகுதிகளில் சட்ட விரோதமாக கொட்டுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருகின்றன.

கரோனா நோய் தொற்று சூழலில் மருத்துவக் கழிவுகளை முறையில்லாமல் திறந்தவெளியில் கொட்டுவது பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, அனைத்து மருத்துவமனைகள், கரோனா பராமரிப்பு மையங்கள், தனிமைப் படுத்தப்பட்ட முகாம்கள் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து அந்தந்த பகுதிகளில் மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதை தவிர்க்க உறுதி செய்ய வேண்டும். விதிகளை பின்பற்றாமல் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x