Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம் : மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்

திருவண்ணாமலை அடுத்த புனல்காடு பகுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சரக்கு வாகனத்தை கயிறு கட்டி மாடு மூலம் இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை அருகே உள்ள புனல்காடு பகுதியில் நேற்று நூதனப் போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண் ணாமலை அடுத்த புனல்காடு மேட்டு பகுதியில் நேற்று நூதனப் போராட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார். சரக்கு வாகனத்தில் கயிறு கட்டி மாடு மூலமாக இழுத்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில், “பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து” முழக்கமிட்டனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது” என்றனர்.

இதில், ஒன்றியச் செயலாளர் ராமதாஸ், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பழனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x