Published : 15 Jun 2021 03:13 AM
Last Updated : 15 Jun 2021 03:13 AM

முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, காமராஜூக்கு எதிரான - வழக்கை வாபஸ் பெற்றார் பேரவை தலைவர் :

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ் ஆகியோருக்கு எதிரான முறைகேடு வழக்குகளையும், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் முன்பாக பொதுத்துறைச் செயலரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்தும் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடர்ந்த வழக்குகளை அவர் வாபஸ் பெற்றுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழகம் முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்த 412 தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்த எஸ்.பி.வேலுமணி முறைகேடுகள் செய்துள்ளதாக அப்போது திமுக முன்னாள் எம்எல்ஏ-வாக இருந்த மு.அப்பாவு, லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அதேபோல கரோனா முதல் அலை பரவலின்போது குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ ரேஷன் அரிசி கூடுதலாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கி விட்டு, மீதி அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி அதன்மூலம் ஒரு கிலோ அரிசி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்துள்ளதாக அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு எதிராகவும் குற்றம் சாட்டி மு.அப்பாவு லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல், அமைச்சர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதான புகார்களை விசாரிக்கும் முன்பாக பொதுத்துறைச் செயலரின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற 2018-ம் ஆண்டு அரசாணைப்படி, தனது புகார்கள் பொதுத்துறைச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் அமைச்சர்கள் இருவர் மீதான புகார் தொடர்பாக ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும், எனக்கோரி மு.அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக 2 வழக்குகளைத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் கடந்த பிப்ரவரியில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிரான புகாரை விரிவாக விசாரித்த தலைமைச் செயலர் அந்த புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை எனக்கூறி முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்குகள் நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது

ஆட்சி மாற்றம் காரணமாக திமுக சார்பில் ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுஉள்ள மு.அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இவ்வழக்குகளை தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x