Published : 15 Jun 2021 03:13 AM
Last Updated : 15 Jun 2021 03:13 AM

கூடலூர், பந்தலூர், மசினகுடி பகுதிகளில் - 5 நாட்களுக்குப் பிறகு அத்தியாவசிய கடைகள் திறப்பு :

கூடலூர்

கூடலூர், பந்தலூர், மசினகுடி ஆகிய பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்றுமுதல் பகல் 1 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டன.

கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நோய் பரவல் குறையாததால், சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மாலை 5மணி வரை திறக்க அரசு அனுமதித்தது. ஆனால், கரோனா பரவல் குறையாததால், வணிகர்களின் முடிவின்படி கடந்த வாரம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், கூடலூர், பந்தலூர், மசினகுடி பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் நேற்றுமுதல் பகல் 1 மணி வரை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கூடலூர், பந்தலூர், மசினகுடி பகுதி ஒருங்கிணைந்த வணிகர்கள் சங்கச் செயலாளர் அப்துல் ரசாக் கூறும்போது, "கரோனா பரவல் சற்று குறைந்து வரும் சூழலில், மேலும் பரவாமல்தடுக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர்வேண்டுகோளுக்கிணங்க கடந்த 5 நாட்கள் கடைகளை முழுமையாக அடைத்து ஒத்துழைப்பும் வழங்கினோம். தற்போதுள்ள சூழ்நிலையில் ,தமிழக அரசு அறிவித்துள்ளதளர்வுகளின் அடிப்படையில் கடைகளை திறக்க மேற்கண்ட பகுதிகளிலுள்ள 15 வணிகர்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைப்படி, வணிகர்களின் வாழ்வாதாரம் மற்றும்அவர்களைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை கருத்தில்கொண்டு இன்று (நேற்று) முதல் காலை 6 முதல் பகல் 1 மணி வரை மட்டுமே மளிகை,காய்கறி, பழக் கடைகள், மீன், இறைச்சிக் கடைகள், விவசாயத்துக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி கடைகள் திறந்து செயல்படும் "என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x