Published : 15 Jun 2021 03:13 AM
Last Updated : 15 Jun 2021 03:13 AM
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உடுமலை அரசு மருத்துவமனையில் காத்திருந்தவர்களுக்கு, நீண்ட நேரமாகியும் தடுப்பூசி செலுத்தாமல் அலைக்கழிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கரோனாதடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை 6 மணி முதலே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 7.30 மணி ஆகியும் யாருக்கும் டோக்கன் வழங்காமலும், தடுப்பூசி செலுத்தாமலும் காத்திருப்பதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து உடுமலை கோட்டாட்சியர் கீதாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. கோட்டாட்சியரின் உத்தரவின்பேரில், பாதுகாப்பு பணிக்கு உடனடியாக போலீஸார் அமர்த்தப்பட்டதோடு, போலீஸாரே டோக்கன் விநியோகிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து சில மணி நேரத்தில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி தேவைப்படுவோருக்கு தனித்தனியே செலுத்தப்பட்டது.
இதுகுறித்து கோட்டாட்சியர் கூறும்போது, "தடுப்பூசி செலுத்தும் பணியில் கூடுதல் கவனம் செலுத்த மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதாரபணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்கள்வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT