Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM
திருச்சி: எஸ்ஆர்எம் பல்கலைக்கழக திருச்சி வளாகத்தின் செயல்பாடுகளை தொடங்க மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை ஜூன் 1-ம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘ஏ’ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாகம், தற்போதுள்ள வளாகத்தில் அமையப் பெற்றுள்ள கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களுக்குள் கூடுதல் அங்கமாக இணைக்கப்பட உள்ளது. எனவே, வெளிமாநிலங்களுக்கு கல்வி பயில்வதற்காக சென்று கொண்டிருந்த மாணவர்கள் தற்போது திருச்சியில் அமையப் பெற்றுள்ள பல்கலைக்கழகத்திலேயே கல்வி பயிலும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஆகியவை இந்த கல்வியாண்டு முதல் வழங்கப்பட உள்ளன. பல்வேறு பி.டெக் படிப்புகளுக்கான சேர்க்கை எஸ்ஆர்எம் நுழைவுத் தேர்வு(SRMJEEE) மூலம் இருகட்டங்களாக நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வு சில வெளிநாடுகளிலும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வுகள் ஜூன் 29, 30-ம் தேதிகளில் நடத்தப்படும். மாணவர்கள் www.ist.srmtrichy.edu.in என்ற இணையதள முகவரியில் ஜூன் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாகத்தில் சேரும் மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் உதவித்தொகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT