Published : 15 Jun 2021 03:15 AM
Last Updated : 15 Jun 2021 03:15 AM

பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு :

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 15-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும். தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள் சேலம், தருமபுரி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 16, 17-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 18-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

15-ம் தேதி மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளிலும், 15, 16-ம் தேதிகளில் மத்திய வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். கேரளா, கர்நாடகா, கோவா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வரும் 17-ம் தேதி வரையும், தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் 18-ம் தேதி வரையும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x