Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

பேரவைத் தலைவராகிறார் பாஜக எம்எல்ஏ - புதுச்சேரி அமைச்சரவை 16-ம் தேதி பதவியேற்பு : பட்டியலை இன்று அளிக்கிறார் முதல்வர்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றி தேர்வாகிறார். அவர், வரும் 16-ம் தேதி பதவியேற்கிறார். அன்று மாலையே ராஜ்நிவாஸில் அமைச்சரவையும் பதவியேற்கிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜககூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, கடந்த மே 7-ம் தேதி முதல்வராக பதவியேற்றார். அமைச்சரவை பங்கீட்டில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவியதால் ஒரு மாதத்துக்கும் மேலாக இழுபறி நீடித்தது. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டது.

பாஜகவுக்கு பேரவைத் தலைவர் மற்றும் 2 அமைச்சர் பதவிகளை அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பாஜகதரப்பில் பேரவைத் தலைவர், அமைச்சர்கள் பட்டியலை மேலிடம் உறுதி செய்து தந்துள்ளது. பேரவைத் தலைவராக செல்வமும், அமைச்சர்களாக நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதை முதல்வர் முறைப்படி அறிவிப்பார் என்று பாஜக தரப்பில் தெரிவித்துவிட்டனர்.

அதேபோல என்.ஆர். காங்கிரஸிலும் யார், யாருக்கு அமைச்சர் பொறுப்பு என்பதை முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துவிட்டார். இன்று வளர்பிறை முகூர்த்த நாளாக இருப்பதால் அமைச்சரவை பட்டியலை ராஜ்நிவாஸில் முதல்வர் ரங்கசாமி அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:

பாஜக எம்எல்ஏ செல்வம், பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை சட்டப்பேரவை செயலரிடம் இன்றுஅளிக்கிறார். ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை. வரும் 16-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது, பேரவைத் தலைவராக செல்வம் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்படும். அன்று மாலையே ராஜ்நிவாஸில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கான பொறுப்புகளை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வாரியத் தலைவர் பதவி

என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் 3 பேருக்கு அமைச்சர் பதவி தரலாம் என்றும் சட்டப்பேரவை துணைத் தலைவர், முதல்வரின் நாடாளுமன்ற செயலர் ஆகிய பதவிகளும் எம்எல்ஏக்களுக்கு தரப்படலாம் என்றும் தெரிகிறது. அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களுக்கு வாரியத் தலைவர் பதவிதரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.இதனால், முக்கிய வாரியங்களைகைப்பற்றுவதில் எம்எல்ஏக்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x